ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா?.. இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் திருநாவுக்கரசர்
தமிழகத்தில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
டெல்லி: தமிழக அரசியல் களத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதா அல்லது சசிகலாவை ஆதரிப்பதா என்பது குறித்து இதுவரை காங்கிரஸ் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கான அவசியமும் இப்போது எழவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் சூழலில் காங்கிரஸ் மீதும் மக்களின் பார்வை திரும்பியுள்ளது. காரணம், காங்கிரஸ் வசம் 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களை தங்கள் பக்கம் இழுக்க சசிகலா தரப்பு தீவிரமாக முயல்வதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திருநாவுக்கரசர் பழைய அதிமுக முக்கியஸ்தர் என்பதால் அவரும் இதில் நாட்டத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் திருநாவுக்கரசர் டெல்லி வந்துள்ளார். அங்கு இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து அவர் பேசினார். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசுகையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து கட்சி தலைமையிடம் பேசினோம். அவர்கள் கேட்டனர். எங்களது கருத்தை நாங்கள் சொன்னோம். என்ன சொன்னோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது.
தமிழக நிலவரம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எடுக்க வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை. தமிழகத்திற்கு ஆட்சி வேண்டும், முதல்வர் வேண்டும். சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது நடக்கட்டும்.
ஆளுநர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மத்திய பாஜக அரசு தமிழகத்தில் அரசியல் விளையாட்டை நடத்தக் கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications