வெளிநாடு போவது, பாஸ்போர்ட் வைத்திருப்பது.. அடிப்படை உரிமை- டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: வெளிநாடு போக விரும்புவது, பாஸ்போர்ட் வைத்திருப்பது போன்றவை இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையாகும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
3 முறை பாஸ்போர்ட்டைத் தொலைத்தை ஒருவருக்கு மத்திய அரசு மீண்டும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று அளித்த உத்தரவின்போது இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
நீதிபதி மன்மோகன் தலைமையிலான பெஞ்ச்தான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

3 முறை பாஸ்போர்ட் தொலைத்த விகாஷ்
ஏ.விகாஷ் என்பவர் 3 முறை பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டார். மீண்டும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். ஆனால் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அவருக்கு பாஸ்போர்ட் தர மறுத்து விட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார் விகாஷ். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், 3 முறை நான் பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டேன். நான்காவது முறையாக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தேன். பாஸ்போர்ட்டும் கிடைத்தது. ஆனால் அது சேதமடைந்து விட்டது. இதையடுத்து அதை அலுவலகத்தில் ஒப்படைத்து புதியது தர வேண்டும் என்று கோரினேன்.

வேணும்னே செய்யலை
நான் வேண்டும் என்றே பாஸ்போர்ட்டுகளைத் தொலைக்கவில்லை, சேதமடையவும் செய்யவில்லை. தவறுதலாக நடந்து விட்டது.

பல நாடுகளுக்கும் போனேன்
எனது பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நான் பல நாடுகளுக்கும் அமைதியான முறையில் போய் வந்துள்ளேன். சுற்றுலா செல்வது எனக்கு விருப்பமான ஒன்றும் கூட. இப்போது பாஸ்போர்ட் இல்லாமல் என்னால் எங்கும் போக முடியவில்லை. எனவே எனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

பத்திரமாக வச்சுக்க வேணாமா...
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், பாஸ்போர்ட் என்பது அரசு ஆவணமாகும். மதிப்பு வாய்ந்த அதை கவனக்குறைவால் தொலைத்துள்ளார், சேதப்படுத்தியுள்ளார். எனவே இவருக்கு பாஸ்போர்ட் எப்படித் தருவது என்று கேட்டிருந்தது.

அப்படிச் சொல்லப்படாது..
இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த கோர்ட், இந்த வழக்கில், மனுதாரர் தரப்பி்ல் வேண்டும் என்றே தவறு நடந்ததாக தெரியவில்லை. அவரது வாதத்தி்ல நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் அவரால் தொலைக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலம் தவறு, முறைகேடு நடந்ததாகவும் தெரியவில்லை.

அடிப்படை உரிமை
பாஸ்போர்ட் வைத்துக் கொள்வதும், வெளிநாடுகளுக்குப் போக விரும்புவதும், போவதும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை. அதை நாம் மறுக்க முடியாது.

புதுசா கொடுங்க
எனவே மனுதாரருக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விகாஷ்.. உங்களுக்கும் ஃபைன்!
அதேசமயம், கவனக்குறைவால் பாஸ்போர்ட்டுகளைத் தொடர்ந்து தொலைத்து வரும் மனுதாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அவர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications