சோலார் மின் உற்பத்தியை பெருக்க மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் தீவிர முயற்சி!
டெல்லி: சோலார் திட்டங்களிடமிருந்து குறைந்த விலையில் மின்சாரம் பெறும் வகையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை மத்திய மின்சாரத்துறை உருவாக்கியுள்ளது.
பிற மரபுசாரா எரிசக்தி துறைகளிலும் இதேபோன்ற நிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத்துறை சட்டம் 2003ன் பிரிவு 63ன்கீழ் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 5 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள உரிமையாளர்களிடமிருந்து மின்சார கொள்முதல் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள், http://www.mnre.gov.in. என்ற வெப்சைட்டிலும் இடம் பெற்றுள்ளன.
உலகிலேயே அதிகப்படியாக மரபுசாரா மின்சார உற்பத்தியை நோக்கி இந்தியா செல்கிறது. வெளிப்படையான கொள்முதல் மற்றும்பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் காரணமாக சோலார் மின்சார கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.2.44 என்ற அளவுக்கு குறைத்துள்ளது.
மின்சார துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் இதுதான்:
குறைந்த கட்டணத்தை உறுதி செய்யும் வகையில், குறைந்தபட்ச பொதுதனியார் பார்ட்னர்ஷிப் காலகட்டமம் 25 வருடங்களாக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் இந்த ஒப்பந்தத்தை திருத்த முடியாது.
செலுத்தும் தொகைக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறை உள்ளது. சட்டத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்து தெளிவு மற்றும் நம்பகத்தன்மையை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்த கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நுகர்வோர் நலனை பாதுகாக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.