இன்று சீமாந்திரா பந்த்: இருசக்கர வாகனங்களைக் கூட அனுமதிக்க மறுப்பு
திருப்பதி: தனி தெலங்கானாவை எதிர்த்து இன்று (செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை) சீமாந்திரா பகுதி முழுவதும் பந்த் நடத்துகிறது கூட்டு நடவடிக்கை குழு.
கடந்த 54 நாட்களாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்கும் முடிவை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி போராட்டக்காரர்கள் தங்கள் பணிகளையும் விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்காமல் தனி தெலங்கானா மாநில அறிவிப்பை திரும்பப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்கள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே ஒருமுறை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது, திருமலைக்கு 1 முறை பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னர் நடைபெற்ற 2 முழு அடைப்பு போராட்டத்தின் போதும், தேவஸ்தான அதிகாரிகளின் வேண்டுகோளால் திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், இன்று நடைபெறும் பந்த்தில் திருப்பதிக்குச் செல்ல போக்குவரத்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருசக்கர வாகனங்களுக்குக் கூட தடை விதித்துள்ளது கூட்டு நடவடிக்கைக் குழு. ஏற்கனவே, இன்று பக்தர்கள் திருப்பதிக்கு வருவதைத் தவிர்க்கவும் என கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று முதல் இம்மாத 30-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, திருப்பதியில் உள்ள துணிக்கடை வியாபாரிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 25-ஆம் தேதி முதல் 1 வாரம் வரை காலை 9 மணிமுதல் 11 மணிவரை மின்சாரத்தை துண்டித்து விட்டு வியாபாரம் செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.