திட்டமிட்டப்படி நாளை வங்கிகள் வேலை நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படும்
நாடுமுழுவதும் நாளை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாடிக்கையாளர்கள் சேவை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து டெல்லியில் கடந்த 19ம் தேதி நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், " தேசிய வங்கி துறைகளுக்கு எதிராக சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு அதை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.

இதற்கு எதிராக பலமுறை குரல் கொடுத்தும் இதுவரை அரசுடன் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அதனால் இந்த நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நாட்டில் உள்ள ஒன்பது முக்கிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கள் ஒன்றுகூடி நாளை அகில இந்திய அளவில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தோம். அதன்படி போராட்டம் நடைபெறுகிறது". என்று தெரிவித்தார்.
வங்கிகளின் தொழிற்சங்கங்கள் சார்பாக மத்திய அரசுக்கு," சுமார் ₹110 லட்சம் கோடி பணமதிப்பு புழங்கக்கூடிய இந்த பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, உலக போட்டியில் எங்களை இணைத்து செயல்படக்கூடாது. வங்கி கிளைகளை மூடுவதற்கு முயற்சிக்க கூடாது.
சாதாரண மக்களுக்கும் உதவக்கூடிய வங்கி சேவைகளை வழங்க வேண்டும், கிராமப்புற வங்கி கிளைகளை அதிகளவில் தொடங்க வேண்டும் மற்றும் குறைவான வட்டிகளில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துறை ஆகியவைகளுக்கு கடன் வழங்க முன்வர வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.
ஆனால் இதற்கு அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நாளை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 10 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.












Click it and Unblock the Notifications