தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த சாத்வி.. 72 மணி நேரம் மியூட் போட்ட ஆணையம்.. பிரச்சாரத்திற்கு தடை!
தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்து உள்ளது.
போபால்: தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்து உள்ளது. 72 மணி நேரம் அவர் பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சாத்வி பிரக்யா தாக்குர்தான் இந்த தேர்தலில் பாஜகவின் வைரல் பிரச்சார பீரங்கி என்று கூட கூறலாம். குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி இருக்கும் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.
இவரது சர்ச்சையான கருத்துக்களை பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலரே சகித்துக் கொள்ள முடியாமல் கண்டனம் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். இவர் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக போபாலில் போட்டியிடுகிறார்.

என்ன சொன்னார்
கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் சாத்வி பிரக்யா தாக்குர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். பாபர் மசூதியின் மேல் ஏறி நான் அதை இடித்தேன்.
போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேவிற்கு நான்தான் சாபம் விட்டேன். அதனால் அவர் பலியானார், என்று வரிசையாக நிறைய கருத்துக்களை தெரிவித்தார்.

தடை
இந்த நிலையில் இவரது பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பலர் புகார் அளித்தனர். இதனால் தேர்தல் ஆணையம் இவர் மீது எப்ஐஆர் பதிய உத்தரவு பிறப்பித்தது. தற்போது பிரக்யா தாகூர் மீது தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

என்ன நடவடிக்கை
அதன்படி சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்து உள்ளது. 72 மணி நேரம் அவர் பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தடை இன்று காலையில் இருந்து அமலுக்கு வருகிறது. ஏற்கனவே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இப்படி சர்ச்சையாக பேசி தடை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications