மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமான பணியில் விபத்து... 3 தொழிலாளர்கள் பலி
காந்திநகர்: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில், குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள மாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டதில், ஒரு தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களை அடுத்தடுத்து மீட்டனர்.

இந்த விபத்து மாலை 5 மணியளவில் நிகழ்ந்தது. உடனடியாக, உள்ளூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர்.
2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புல்லட் ரயில் திட்டம், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு முக்கிய நகரங்களை இணைத்து, பயண நேரத்தை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில், இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த விபத்து, புல்லட் ரெயில் திட்டத்தின் கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், புல்லட் ரெயில் திட்டத்தின் நிறைவு காலத்தை மேலும் தள்ளிப்போடக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications