ஓடும் ரயிலில் பயணியை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை... பீகாரில் கொள்ளையர்கள் அட்டூழியம்
பாட்னா: பீகாரில் ஓடும் ரயிலில் பயணியைச் சுட்டுக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ராம்பூர் தும்புரா ரயில் நிலையம் அருகே கோதர்த்பூர்- கதியா மயூர்யா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவு நேரமாதலால் அனைத்துப் பயணிகளும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
அப்போது ஆயுதம் தாங்கிய 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அந்த ரயிலில் ஏறியது. தூங்கிக் கொண்டிருந்த பயணி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட அக்கும்பல் அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்தது. இதில் குண்டடி பட்ட அந்த பயணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அங்கிருந்த மற்ற பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டியவாறு ஓடும் ரயிலில் இருந்து கொள்ளையர்கள் இறங்கி தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் மேலும் 4 பயணிகள் குண்டு காயம் அடைந்தனர்.
கொள்ளையர்கள் ரயிலில் இருந்து குதித்துச் சென்றதும், மற்ற பயணிகள் ரயிலை நிறுத்தி கொலை, கொள்ளை தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். உடனடியாக குண்டடி பெற்று காயமடைந்த நான்கு பயணிகளும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஓடும் ரயிலில் பயணியைக் கொலை செய்து பணத்தைக் கொள்ளையடித்த அந்த மர்ம கும்பலை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications