திரிணாமுல் காங்.கின் மூத்த தலைவர்.. மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி (75) காலமானார்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க பஞ்சாயத்து அமைச்சருமான சுப்ரதா முகர்ஜி (75) நேற்று இரவு காலமானார். நேற்று இரவு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சுப்ரதா முகர்ஜி கடந்த சில வாரங்களாக பல்வேறு உடல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் இவருக்கு இதய பாதிப்புகள் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுப்ரதா முகர்ஜிக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு stent thrombosis என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நேற்று இரவு உடல்நிலை மோசமாகி காலமானார்.
இவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்ட இன்ன பிற உடல்குறைபாடுகளும் இருந்த காரணத்தால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு சுப்ரதா முகர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நேற்று தீபாவளியை முன்னிட்டு காளிஹாட் பகுதியில் காளி பூஜை நடத்திக்கொண்டு இருந்த முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்களுடன் ஆலோசனை செய்த பின் சுப்ரதா முகர்ஜி மரணம் அடைந்ததாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இருந்தவர் சுப்ரதா முகர்ஜி. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக சுப்ரதா முகர்ஜி இருந்தார். பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது 2000ல் கொல்கத்தா மேயராகவும் இவர் இருந்துள்ளார்.
2010ல் இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர், இந்த முறை பஞ்சாயத்து துறை உள்ளிட்ட 4 அமைச்சரவை பொறுப்புகளை கவனித்து வந்தார்.
சுப்ரதா முகர்ஜி மறைவிற்கு மேற்கு வங்கம் மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.