2024 தேர்தலில் தனித்து தான் போட்டி.. எதிர்க்கட்சிகளுக்கு 'ஷாக்' கொடுத்த மம்தா பானர்ஜி.. என்ன காரணம்?
கொல்கத்தா: மக்களின் ஆதரவுடன் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். பாஜகவை வீழ்த்த விரும்புபவர்கள் எங்களுக்கு வாக்காளிப்பர்கள் என்று நம்புகிறேன். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிப்பது பாஜகவிற்கே வாக்களிப்பது போன்றதாகும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை மிகக் கடுமையாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவையும் காட்டமாக விமர்சிக்கும் மம்தா பானர்ஜ வரும், 2024 ஆம் ஆண்டு லோக்சபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தீவிரமாக பேசி வருகிறார். இதற்காக தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்கும் முனைப்பிலும் மம்தா பானர்ஜி ஈடுபட்டார்.

மம்தாவின் கட்சி தோல்வி
இருந்தாலும் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியுடன் அவ்வளவு நெருக்கம் காட்டாமலே மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். மேற்கு வங்காளத்தில் செல்வாக்கு மிக்க கட்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளது. அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்தாலும் தனது மாநிலத்திற்கு வெளியே கட்சியை கால் பதிக்க வைக்க கடும் சிரமப்படுகிறார். கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது.

மக்களுடன் மட்டுமே கூட்டணி
திரிபுராவிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மேகலயாவில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவது இல்லை என்று அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து இருக்கிறது. வேறு எந்த கட்சிகளுடனும் நட்பு கொள்ளவில்லை.

தனித்து போட்டியிடுவோம்
மக்களின் ஆதரவுடன் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். பாஜகவை வீழ்த்த விரும்புபவர்கள் எங்களுக்கு வாக்காளிப்பர்கள் என்று நம்புகிறேன். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிப்பது பாஜகவிற்கே வாக்களிப்பது போன்றதாகும்" என்றார். தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே , ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யார் ஆட்சி அமைக்க வேண்டும்
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின், "வரும் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். எனவே வேற்றுமைகளை மறந்து விட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் . பாரதிய ஜனதாவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் இதை ஒற்றை இலக்காக கொண்டு திட்டமிட்டு ஒன்று சேர வேண்டும். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குதான் என்பதையும் அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்" என்று எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

மம்தாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
இந்த நிலையில், மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா? என்பதை வரும் நாட்களில் தான் தெரிய வரும் என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications