தேர்தல் நெருங்குது- திரிபுராவில் பாஜகவுக்கு அடிமேல் அடி- 5-வது எம்.எல்.ஏ. கட்சியை விட்டு எஸ்கேப்!
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில பாஜகவில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறி உள்ளனர்.
திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா இடதுசாரிகளின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது.

திரிபுராவைப் பொறுத்தவரை இடதுசாரிகள், காங்கிரஸ் என்கிற இரு கட்சிகள் நிலைமைதான் இருந்து வந்தது. இம்மாநிலத்தில் பாஜகவால் ஒரு கவுன்சிலர் இடம் கூட பெற முடியாத காலம் இருந்தது. ஆனால் திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சியை கூண்டோடு ஆபரேஷன் லோட்டஸ் மூலம் கபளீகரம் செய்தது பாஜக. இதனால் திரிபுராவில் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.
திரிபுரா சட்டசபையில் தற்போது பாஜகவுக்கு 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சிபிஎம் கட்சிக்கு 15; காங்கிரஸுக்கு 1 எம்.எல்.ஏ. என இருந்தனர். 5 இடங்கள் காலியாக உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 29 எம்.எல்.ஏக்கள். தற்போது பாஜகவின் எண்ணிக்கை 29 ஆகவும் ஐபிஎப்டி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 2 ஆகவும் குறைந்துள்ளது.
திரிபுரா பாஜக கூட்டணி ஆட்சியான உட்கட்சி மோதலால் மிக மோசமான தள்ளாட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக கூட்டணி அரசில் இருந்து எம்.எல்.ஏக்கள் வெளியேறி வருகின்றனர். பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி, மொத்தம் 5 எம்.எல்.ஏக்களில் 3 பேரை இழந்தது. இதேபோல் பாஜகவும் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்களை இழந்து வந்தது. கடந்த ஓராண்டில் 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். தற்போது 5-வது எம்.எல்.ஏவும் பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளார். தற்போது பாஜகவில் இருந்து வெளியேறி உள்ள திபா சந்திரா, 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
பாஜக கூட்டணி அரசில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏக்கள் திப்ரா மோதா எனப்படும் மாநில கட்சியில் இணைந்து வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் இந்த கட்சிதான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications