திரிபுரா சட்டசபை தேர்தல்: 4 மணி நிலவரப்படி 74 சதவீத வாக்குகள் பதிவு
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று முடிந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
திரிபுரா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. சாரிலம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ராமேந்திர நாராயண் டெப்பர்மா மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்காக 3 ஆயிரத்து 214 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவை ஆளும் சிபிஎம் கட்சியை தோற்கடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.