'திரிணாமுல் தலைவர்களை தாலிபான்கள் பாணியில் தாக்குங்கள்'.. பா.ஜ.க எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை!
அகர்தலா: அகர்தலா விமான நிலையத்தில் தரையிறங்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தாலிபான்கள் பாணியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று திரிபுரா மாநில பாஜக எம்.எல்.ஏ அருண் சந்திர பவுமிக் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
புதிதாக பதவியேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் பிரதிமா பவுமிக் பாராட்டு விழாவில் பேசிய எம்.எல்.ஏ அருண் சந்திர பவுமிக் கூறியதாவது:-

பாஜக அரசு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தூண்டுதலின் பேரில் திரிபுராவில் பிப்லாப் தேப் தலைமையிலான அரசை சேதப்படுத்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள். தாலிபான்கள் பாணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தாக்குமாறு உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தாக்க வேண்டும்
அவர்கள் அகர்தலா விமான நிலையத்தில் இறங்கும்போது நாம் இதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு துளி இரத்தத்துடனும் நமது அரசாங்கத்தை நாம் இங்கு பாதுகாக்க வேண்டும் என்று அருண் சந்திர பவுமிக் கூறினார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பொறுப்பற்ற பேச்சு இது என்று அருண் சந்திர பவுமிக்கை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்தனர்.

பாஜக குண்டர் படை
இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் இளைஞரணி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ரிதாபிரதா பானர்ஜி கூறியதாவது:- திரிணாமுல் தலைவர்களைத் தாக்க பாஜக ஒரு குண்டர் படையை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே திரிபுரா பயணத்தின்போது திரிணாமுல் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கார் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

மத்திய அரசு ஆதரவா?
உலகம் முழுவதும் தாலிபான்களை விமர்சிக்கும் நேரத்தில், அரசியலமைப்பின் பெயரால் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற எம்.எல்.ஏ, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தாலிபான் பாணியில் தாக்க வேண்டும் என்கிறார். மத்திய அரசு தாலிபான்களுக்கு ஏதும் ஆதரவாக இருக்கிறதா? தாலிபான்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் கிடைத்துள்ளன. தாலிபான் போன்ற அதிநவீன ஆயுதங்கள் பா.ஜ.க.விடம் இருந்தாலும் ஆச்சரியமில்லை.

செல்வாக்கு இழந்து விட்டது
திரிபுராவில் பா.ஜ.க மக்களிடத்தில் செல்வாக்கு இழந்து வருகிறது. இந்த விரக்தியின் காரணமாக திரிணாமுல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. திரிணாமுல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று கூறுகிறது. பா.ஜ.க எம்.எல்.ஏ அருண் சந்திர பவுமிக் தனது மோசமான கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று ரிதாபிரதா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications