"ஆபாச படம்!" அதுவும் சட்டசபையிலேயே.. பாஜக எம்எல்ஏ செய்த முகம்சுளிக்க வைக்கும் செயல்! கடும் எதிர்ப்பு
அகர்தலா: திரிபுராவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் சட்டசபையிலேயே ஆபாசப் படம் பார்த்த விவகாரம் மிகப் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த பிப். 16ஆம் தேதி தான் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில் பாஜக 32 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய போதிலும், அவர்களால் 14 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்த நிலையில், மாணிக் சாஹா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
திரிபுரா
பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சில காலம் மட்டுமே ஆகும் நிலையில், இப்போது பாஜக எம்எல்ஏ ஒருவர் அங்கே சர்ச்சையில் சிக்கியுள்ளார். திரிபுரா சட்டசபை கூட்டத்தொடர் இப்போது நடைபெற்ற வரும் நிலையில், அங்கே பாஜக எம்எல்ஏ ஜதாப் லால் நாத் என்பவர் சட்டசபையிலேயே ஆபாசப் படம் பார்த்ததாகப் புகார் எழுந்தது. பாக்பாசா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான அவர், அமர்வு நடந்து கொண்டிருந்தபோதே மொபைலில் ஆபாசப் படம் பார்த்துள்ளார்.
ஆபாசப் படம்
இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. திரிபுராவில் மாநில பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டசபையில் நடந்த போது தான், இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பேசிக் கொண்டிருந்தபோது இது நடந்துள்ளது. அவரது பின்னால் அமர்ந்திருந்த யாரோ ஒருவர் இதைப் படம் பிடித்துள்ளார். அவர் ஆபாச வீடியோ கிளிப்களை ஸ்கரால் செய்து பார்ப்பது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சம்மன்
மற்ற எம்எல்ஏக்கள் விவாதத்தைக் கவனித்து வந்த நிலையில், இவர் மட்டும் இதுபோல ஆபாசப் படம் பார்த்தாக தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு, அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ஜாதவ் லால் நாத் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
முதல்முறை இல்லை
கூட்டத்தொடர் முடிந்தவுடன் அவர் சட்டசபை வளாகத்தை விட்டு வெளியேறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் இது குறித்து அவர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அரசியல்வாதி ஒருவர் பொது இடத்தில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொள்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நமது நாட்டிலேயே நடந்துள்ளது.
கர்நாடகா
கடந்த 2012 ஆம் ஆண்டு, கர்நாடகாவில் பாஜக ஆட்சியில், சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே இரண்டு அமைச்சர்கள் மொபைல் போனில் ஆபாச வீடியோவைப் பார்த்து மாட்டிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தனர். ரேவ் பார்டிகள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவே அப்படிப் பார்த்தாக சொல்லிச் சமாளித்தார்கள். அவர்கள் மீதான விசாரணையில், அவர்கள் தவறாக எதையும் செய்யவில்லை என்று கூறியதை அடுத்து அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது.