ஐயோ.. சந்திரசேகர ராவ் முதுகில் குத்திட்டாரே.. தெலுங்கானாவில் ராகுல் காந்தி ஆவேசம்
ஹைதராபாத்: அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தெலங்கானா ராஷ்டிரிய சமித்தி தலைவர் சந்திரசேகர ராவ் எனது முதுகில் குத்திவிட்டார் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

தெலங்கானா மண்டலத்தில் வரும் நிஜாமபாத், மெகபூர்நகர் பகுதிகளில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தபோது பேசியதாவது:
தெலங்கானா ராஷ்டிரிய சமித்தி தலைவர் சந்திரசேகர ராவ் பதவி மற்றும் அதிகாரம் ஒன்றேயே குறிக்கோளாக கொண்டவர். சந்திரசேகரராவ் எனது வீட்டுக்கே வந்து எனது அறையில் என்பக்கத்தில் அமர்ந்து 7 நிமிட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனது கைகளை குலுக்கி ராகுல்ஜி நான் உங்களுடன் உள்ளே என்றார்.
பிறகு மீண்டும் ஒருமுறை வீட்டுக்கு திரும்பிவந்து எனக்கு கைகொடுத்து நான் உங்களுக்கு அதிர்ச்சியளிக்கப் போகிறேன் என்றார். தெலங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிடுவேன் என்று கூறிய தனது வாக்கை அவர் காப்பாற்றாமல் எநது முதுகில் குத்திவிட்டார்.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் ஒரு தலித் இனத்தை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என்று என்னிடம் சந்திரசேகர ராவ் கூறினார். ஆனால் அவர் காங்கிரசிடம் மட்டுமல்லாமல் மக்களாகிய உங்களிடமும் பொய் கூறிவிட்டார்.
தெலங்கானா மசோதாவை உருவாக்கியதிலோ, அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதிலோ தெலங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சிக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது. தெலுங்கு தேசம், பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் தெலங்கானா மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க முயற்சி செய்தன.
ஆனால் 60 ஆண்டுகால கனவான தெலங்கானா மாநில உதயம் வரும் ஜூன் 2ம்தேதி நனவாகப்போவதற்கு முழு காரணமும் காங்கிரஸ்தான். சோனியாவாலும், காங்கிரசாலும் அல்லாது வேறு யாராலும் இந்த கனவை பூர்த்தி செய்து வைத்திருக்க முடியாது. தெலங்கானா மக்கள் காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டுவந்தால் இந்த மாநிலம் வளர்ச்சி பெறும்.
ஏனெனில் காங்கிரசுக்குதான் எப்படி ஆட்சி செய்ய வேண்டும், எப்படி மக்களை உயர்த்த வேண்டும் என்பது நன்கு தெரியும். நீங்கள் அணியும், டி-சட்டையிலும், வாட்சிலும், இது தெலங்கானாவில் தயாரிக்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும். மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications