திருப்பதி: பக்தர்கள் தங்கும் விடுதிகளில் டெபாசிட் கட்டணம் அதிகரிப்பு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கான ‘டெபாசிட்' கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தேவஸ்தனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான மத்திய வரவேற்பு மைய அதிகாரிகள் வெங்கட்டய்யா, தாமோதரம் ஆகியோர் தெரிவித்துள்ள விவரங்கள் வருமாறு:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் தங்குவதற்காக திருமலை, திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் 7 ஆயிரம் விடுதி அறைகள் உள்ளன. அத்துடன் இலவச விடுதிகளும் உள்ளன. இதுதவிர ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.250 கட்டணத்திலும் தங்கும் விடுதிகள் உள்ளன.
மேற்கண்ட கட்டணத்தில் உள்ள தங்கும் விடுதி அறைகளுக்கான டெபாசிட் தொகையாக பக்தர்களிடம் இருந்து ரூ.350 வசூலிக்கப்படுகிறது. அறைகளை காலி செய்யும்போது டெபாசிட் தொகை பக்தர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். ஆனால், பக்தர்கள் பலர் டெபாசிட் தொகையை திரும்ப பெறாமலும், அவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளின் பூட்டு, சாவியை தேவஸ்தான அலுவலகத்தில் ஒப்படைக்காமலும் சென்று விடுகின்றனர்.
மேலும் அறைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விடுகின்றனர். சிலர் அறையை பூட்டி விட்டு சாவியை மட்டும் எடுத்து சென்று விடுகின்றனர். சிலர் அறையின் சாவியை தொலைத்து விடுகிறார்கள். இதனால், தேவஸ்தான விடுதி ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேற்கண்ட பிரச்சினைகளை சமாளிக்க விடுதி அறைக்கான டெபாசிட் தொகையை அதிகரிக்க தேவஸ்தான மத்திய வரவேற்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தேவஸ்தான உயர் அதிகாரிகள் அனுமதியோடு வருகிற 15-ந் தேதி முதல் விடுதி அறைகளுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. விடுதி அறைகளின் குறைந்த பட்ச டெபாசிட் தொகை ரூ.500 ஆக உயருகிறது.