திருப்பதி: ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் மாற்றம்
திருமலை: பக்கதர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300 ரூபாய் கட்டணத்தில் ‘பிரத்யேக பிரவேச தரிசனம்' தொடங்கப்பட்டது.
அதன் மூலம் பக்தர்கள் ‘வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-1' வழியாக சென்று விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பக்தர்கள் நீண்ட தூரம் நின்று அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
சில நேரத்தில் தரிசனத்துக்காக பக்தர்கள் 12 அல்லது 15 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அதேபோல் சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அதிக நேரம் ஆகிறது.

வசதிகள் இல்லை
சிறப்பு, இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கிறது. ஆனால், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. மழை, வெயில் காலங்களில் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

300 ரூபாய் கட்டணத்தில்
எனவே 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வர திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்து உள்ளது.

25000 டிக்கெட்டுகள்
அதன்படி 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் தினமும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு டிக்கெட் கவுண்டர்
அந்த டிக்கெட்டில் தரிசன நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும். தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருமலையில் 14 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன.

எளிதான தரிசனம்
கவுண்ட்டர்களில் பக்தர்கள் நேரடியாக சென்று டிக்கெட் வாங்கிக்கொண்டு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது என தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications