திருமலையில் கோலாகலமாக தொடங்கிய பிரம்மோற்சவம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருமலை: திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. சீமாந்திர பந்தையும் மீறி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க குவிந்தனர்.
திருமலையில் ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் சனிக்கிழமை மாலை கோலாகலமாகத் தொடங்கின. சனிக்கிழமை மாலை கருடக் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின.
இதற்காக கருடக் கொடி மாடவீதி முழுவதும் ஊர்வலமாக கொண்டு வந்து முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரம்மோற்சவத்தைக் காண அழைக்கும்வண்ணம் ஏழுமலையான் கோவிலுக்குள் உள்ள கொடிமரத்தில் ஏற்றினர்.

பட்டு வஸ்திரம்
பிரம்மோற்சவ நாள்களில் ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் சம்பிரதாயம் சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றம் நடந்து முடிந்த பின்னர் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு வந்து பட்டு வஸ்திரத்தை ஏழுமலையானுக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி சமர்ப்பித்தார்.

வாகன உலா
இரவு நடைபெற்ற பெரிய சேஷ வாகன உலாவும் அவர் கலந்து கொண்டார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டுள்ள ஏழுமலையானுக்கு இந்த வாகனம் மிகவும் உகந்தது என்பது ஐதீகம். அதனால் தன் உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மலையப்பஸ்வாமி பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அன்னப்பறவை ஊர்வலம்
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சின்னசேஷ வாகன உலாவும் இரவு அன்னப்பறவை வாகன உலாவும் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு முன்னால் பல்வேறு குழுவினர் சார்பாக கோலாட்டம், நடன நிகழ்ச்சிகள், இன்னிசை வாத்திய நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

சீமாந்திரா பந்த்
தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் 72 மணி நேர பந்த் அறிவிக்கப்பட்ட நிலையிலும் ஏராளமானோர் திருமலை பிரம்மோற்சவத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications