சின்னத்திற்கு லஞ்சம்.. டிடிவி தினகரனிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்திய டெல்லி போலீஸ்
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டெல்லி போலீஸாரின் உத்தரவை தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் ஆஜரான தினகரனிடம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்கு ஆஜரான தினகரனிடம் தொடர்ந்து 10 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இரு அணிகளிடம் விசாரணை நடத்தயிருந்த வேளையில் அந்த சின்னத்தை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று தினகரன் குறுக்கு வழியை தேடினார். அப்போது அவருக்கு அறிமுகமான சுகேஷ் சந்திரா என்பவர் தனக்கு தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு இருப்பதாகவும், தான் நினைத்தால் சசிகலாவையும் வெளியே கொண்டு வரமுடியும் என்றும் புருடா விட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரட்டை இலையை பெற இருவரும் ரூ.60 கோடி வரை பேரம் பேசினர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த டெல்லி குற்றவியல் போலீஸார் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அறையில் இருந்த புரோக்கர் சுகேஷ் சந்திரா என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் தினகரனுடன் பேரம் நடத்தியது உண்மை என்பன உள்ளிட்ட பல்வேறு தகல்களை சுகேஷ் வாக்குமூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக தினகரன் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று டெல்லி காவல் துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தினகரனை சென்னையில் சந்தித்து சம்மன் அளித்தார்.
அதன்படி தினகரன் நேற்று முன்தினம் டெல்லி சென்று குற்றவியல் போலீஸாரிடம் 3 மணிக்கு ஆஜரானார். அப்போது 7 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும், உதவியாளர் ஜனார்த்தனனிடமும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் தினகரன் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து இரவு 12.30 மணி வரை விசராணை நடைபெற்றது. அதேபோல் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும், உதவியாளர் ஜனார்த்தனனிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications