இரட்டை இலைக்கு லஞ்சம்.. தினகரன் நண்பரிடம் டெல்லி போலீசார் விசாரணை.. பல்வேறு ரகசியங்கள் அம்பலம்
> இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு ரகசியங்கள் அம்பலமாகியுள்ளன,
டெல்லி : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின.
அடுத்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இரு தரப்பினரும் தங்கள் வசம் உள்ள ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம்
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர்.
வழக்கு
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதனால், டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தினகரன் ஆஜர்
பின்னர் சுகேஷ் சந்திரசேகரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகேஷ் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் டிடிவி தினகரன் இன்று நேரில் ஆஜராகி போலீசாரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
நண்பரிடம் விசாரணை
இதனிடையே, டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும் டெல்லி போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தனர். அந்த விசாரணை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் பல்வேறு ரகசியங்கள் அம்பலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று டிடிவி தினகரன் உதவியாளர் ஜனார்த்தனிடமும் விசாரணை முடிவடைந்துள்ளது.