விசாரணை தீவிரம்.. டிடிவி தினகரனை இன்று சென்னை அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கைதான டி.டி.வி. தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று அவரை சென்னை அழைத்துவர டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலீசார், 7 நாட்கள் காவல் கேட்ட நிலையில், 5 நாட்கள் வழங்கி உத்தரவிட்டுள்ளது, கோர்ட். இதையடுத்து மீண்டும் தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடத்த உள்ளது டெல்லி நீதிமன்றம்.
கைதுக்கு முன்பாக தொடர்ச்சியாக 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. விசாரணை நடத்தப்பட்ட நேரத்தை கூட்டிப் பார்த்தால் சுமார் 35 மணிநேரங்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அடுத்த 5 நாட்களும், தினகரனை பெங்களூர், சென்னை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அவரை சென்னை அழைத்துச் செல்கிறது டெல்லி போலீஸ். சென்னையில் அவரிடம் பணப்பட்டுவாடா எப்படி ஆரம்பித்தது என்பது குறித்து விசாரணை நடைபெறும். தினகரன் லஞ்சம் கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் பெங்களூரை சேர்ந்தவராகும். மேலும் இந்த வழக்கோடு தொடர்புடைய இடங்கள் என்பதால் கொச்சி மற்றும் பெங்களூருக்கு தினகரனை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.