‘சரக்கு’ அடிப்பதற்கு பதில் லைட்டை ஆப் செய்து விட்டு ஜூஸ் குடியுங்கள்.. சொல்கிறார் நிதிஷ்குமார்
பாட்னா: அறைக்குள் விளக்குகளை அணைத்து விட்டு ஜூஸ் குடித்துப் பாருங்கள், அதுவும் 'சரக்கு' மாதிரி தான் இருக்கும், உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார், தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், மாநிலம் முழுவதும் முழு மதுவிலக்கை கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளார். மேலும், அண்டை மாநிலத்தில் இருந்து மதுக்கடத்தலை தடுக்க பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டத்திற்கு புறம்பாக மதுவை பீகாரில் கொண்டு வருபவர்களுக்கு சிறைதண்டனை வழங்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு கள்ளச்சாராயம் குடித்து சிலர் உயிரிழந்தனர். எனினும், நிதிஷ்குமார் அரசு தளரவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறையில் சிறப்பு குழுவினரை அமைத்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் கூறுகையில், ''மதுவிலக்கை அமல்படுத்திய போது எனக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனதிருப்தியும், மனநிறைவும் ஏற்பட்டிருக்கிறது. மது குடிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் உடல் நலத்தை கெடுக்கும் மதுவை ஏன் தான் குடிக்கிறீர்கள்? உடல்நலத்தை கெடுக்கும் மது தேவைதானா? போதை வேண்டுமா?
அறைக்குள் சென்று விளக்குகளை அணைத்து விட்டு ஜூஸ் குடித்து பாருங்கள், அதுவும் மதுவை குடித்த உணர்வு தான் தரும் என்றார். இதைக் கேட்டு நிறுபர்கள் சிரித்தனர். மதுவிலக்கு நாடு முழுவதும் ஏற்படுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications