நள்ளிரவில் திடுக்கிட்ட மக்கள்.. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்.. மக்கள் அச்சம்
காத்மண்டு: நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் சற்று மிதமானதாகவும் இரண்டவதாக நள்ளிரவு 1.30 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.58 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று அச்சம் அடைந்த நிலையில், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.
பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலடுக்கங்களால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
வீடுகள் அதிர்ந்ததால், வீட்டை விட்டுவெளியேறிய மக்கள் நள்ளிரவு நேரத்திலும் வீதிகளில் தஞ்சம் அடைந்ததை காண முடிந்தது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. நேபாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உருக்குலைந்தன. நேபாள வரலாற்றில் மிக மோசமன இயற்கை சேதங்களில் ஒன்றாக அறியப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 8,694 பேர் பலியாகினர். சுமார் 21 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு சுவடுகள் மக்கள் மனதில் இன்னமும் மறையாத நிலையில், மீண்டும் அதே ஏப்ரல் மாதம் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications