டெல்லியில் பணத்துக்காக 13 வயது சிறுவனை கடத்தி கொன்ற மாடல், நண்பர் கைது
டெல்லி: டெல்லியில் 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த முகேஷ் வர்மாவின் மகன் உத்கர்ஷ்(13). அவர் கடந்த 18ம் தேதி தனது வீட்டுக்கு வெளியே கடத்தப்பட்டார். அவரை கடத்தியவர்கள் அவரை விடுவிக்க பணம் கேட்டனர். இந்நிலையில் மறுநாள் வர்மாவின் வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உத்கர்ஷ் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். விசாரணையில் வர்மாவுக்கு தெரிந்த யாரோ தான் சிறுவனை கடத்தியது தெரிய வந்தது. சிசிடிவி கேமராவில் பதிவானது மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் கட்டுமானத் தொழில் செய்து வருபவரும், மாடலுமான பிரதீப் சிங் சிசோடியா(22) மற்றும் அவரது நண்பர் சித்தார்த் சர்மா ஆகியோர் சிறுவனை கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினர். கடந்த வாரம் சிசோடியா மற்றும் சித்தார்த் ஆகியோர் போலீசில் சிக்கினர். விசாரணையில் சிறுவனை கடத்தி, கொலை செய்ததை சிசோடியா ஒப்புக் கொண்டார்.
சித்தார்த்தும், சிசோடியாவும் வர்மாவின் வீட்டை கட்ட உதவி செய்துள்ளனர். அவர் பணக்காரர் என்பதை தெரிந்து கொண்ட அவர்கள் சிறுவனை கடத்த திட்டமிட்டனர். சிறுவனை கடத்த திட்டம் போட்டுக் கொடுத்தது சித்தார்த். நவம்பர் 18ம் தேதி சிறுவனை அணுகிய சிசோடியா அவரின் பாட்டி இறந்துவிட்டதாகக் கூறி குரு அங்கத் நகரில் உள்ள சித்தார்த்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். சிறுவன் மயங்கியதும் அவரது பெற்றோருக்கு போன் செய்து பணம் கேட்டுள்ளனர்.
மறுநாள் நிலைமையை கண்டறிய வர்மாவின் வீட்டுக்கு சென்ற சித்தார்த் அங்கு ஏராளமானோர் கூடியிருப்பதை பார்த்து பயந்து போய் திரும்பி வந்து சிறுவனை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் உடலை ஸ்கூட்டரில் வைத்து எடுத்துச் சென்று வர்மாவின் வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் போட்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications