ராணுவ தளம் அருகே பறந்து வந்த டிரோன்.. சரமாரியாக சுட்ட இந்திய வீரர்கள்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம்
ஸ்ரீநகர்: ஜம்முவில் நேற்று விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது டிரோன்கள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

டிரோன்
இந்த தாக்குதல்கள் டிரோன் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு இந்த டிரோன் தாக்குதல் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. குண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்கள், ரிமோட் உதவியுடன் இயக்கப்பட்டு நேரடியாக ஜம்மு விமானப்படைத்தளம் நோக்கி வந்துள்ளது. ஜிபிஎஸ் உதவியுடன் துல்லியமாக விமானப்படை தளம் நோக்கி இந்த டிரோன் வந்துள்ளது.

யார்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானும், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஜம்முவில் உள்ள கலுசாக் ராணுவ தளம் அருகே இந்த டிரோன் விமானங்கள் வந்துள்ளன.

டிரோன்
முதலில் 11.30 மணிக்கு ஒரு டிரோன், பின்னர் 1.30 மணிக்கு ராணுவம் தளம் அருகே இன்னொரு டிரோன் வந்துள்ளது. இதை பார்த்ததும் உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்த வீரர்கள், அந்த டிரோன்களை நோக்கி சுட்டனர். சரமாரியாக டிரோன்களை குறி வைத்து தாக்கினார்கள்.

தாக்குதல்
இதையடுத்து அந்த டிரோன்கள் அங்கிருந்து வேகமாக பறந்து சென்றன. இந்த டிரோன்கள் அதிக வேகத்துடன் இயங்கியதாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது சிறிய அளவிலான தாக்குதல் என்றாலும், நவீன டிரோன்கள் இப்படி தாக்குதலில் இறங்கி இருப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் டிரோன்கள் மூலம் பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications