உபேர் டாக்சி டிரைவர் கைதை அல்வா கொடுத்து கொண்டாடிய உ.பி. கிராமம்
மெய்ன்புரி: டெல்லியில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டதை உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
டெல்லியில் 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் முன்னதாக கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதற்கும் முன்பு 2011ம் ஆண்டும் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி திகார் சிறையில் 7 மாதங்கள் இருந்தார். ஆனால் பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு அவர் பெண்களிடம் சில்மிஷம் செய்த வழக்கில் சிக்கியுள்ளார். இவ்வாறு தொடர் குற்றங்கள் செய்து வந்த யாதவ் கைது செய்யப்பட்டதை அறிந்த உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராம் நகரைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
பெண்கள் பிறருக்கு அல்வா வழங்கியும், சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் யாதவின் கைதை கொண்டாடினர்.
யாதவ் ராம் நகர் கிராமத்தில் உள்ள பெண்களை சீண்டிக் கொண்டும், சில்மிஷம் செய்தும் பல முறை போலீசில் சிக்கியுள்ளார். குண்டர் சட்டத்தில் கூட கைதான அவரை மெய்ன்புரியில் நுழைய போலீசார் தடை விதித்தனர்.