உதம்பூரில் தாக்குதல் நடத்திய பாக். தீவிரவாதிகள் பயன்படுத்திய அமெரிக்க நைட் விஷன் சாதனங்கள்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரவு நேரத்திலும் பார்க்கக் கூடிய அதி நவீன சாதனத்தைப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
அங்கிருந்து மீட்கப்பட்ட இந்த சாதனம் தங்களுடையதுதான் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நைட் விஷன் சாதனம் ஆப்கானிஸ்தானில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படையினர் பயன்படுத்தி வந்ததாகும். அங்கிருந்து இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவி வந்துள்ளது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரோலி அருகே கடந்த 5-ந்தேதி இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளில் 20 வயது முகமது நவீத் யாகூப் மட்டும் உயிருடன் சிக்கினான். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அவனிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இன்னொருவன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான்.
இந்த நிலையில் உதம்பூர் தாக்குதலின்போது தீவிரவாதிகள் பயன்படுத்தியதை தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நைட் விஷன் சாதனங்கள் அமெரிக்கத் தயாரிப்பாக தெரிவதாக சந்தேகித்தனர். இதுகுறித்து அமெரிக்கத் தரப்புடன் தொடர்பு கொள்ளப்பட்டது. அமெரிக்க அதிகாரிகள் அந்த சாதனைத்தைப் பார்த்து விட்டு, அவை தங்களுடையதுதான் என்று உறுதி செய்துள்ளனராம்.
இவை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினர் பயன்படுத்தி வருபவை. அங்கிருந்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கைகளுக்குப் போய் அவர்கள் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைகளுக்கு இவை வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications