மோடியை பற்றி தப்பா நினைச்சுட்டேன்... வதேரா ஒரு 'திருடன்'.. போட்டு தாக்கும் உமாபாரதி
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து முன்பு தவறாக நினைத்திருந்தேன்..பின்னர் என் கருத்தை மாற்றிக் கொண்டேன் என்றும் சோனியாவின் மருமகன் ராபர் வதேரா ஒரு திருடன் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி சாடியுள்ளார்.
சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு உமாபாரதி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ராபர்ட் வதேரா ஒரு முக்கியமான நபரே அல்ல. ஆனால் மிகப் பெரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளதால் அவரைப் பற்றி பேசவேண்டியதிருக்கிறது. யார் இந்த வதேரா? அவர் எப்போது சோனியா குடும்பத்துடன் இணைந்து காந்தியானார்?
சோனியாவின் மகளை திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் அவருக்கு எல்லாமும் கிடைக்கிறது. அது பிரியங்காவின் கணவராக இருந்தால் என்ன யாராக இருந்தாலும் என்ன.. சட்டத்தின் ஒவ்வொரு திருடனும் சமம்தான். அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
மோடி பற்றி...
2007ஆம் ஆண்டு மோடியைப் பற்றி தவறாக கணித்திருந்தேன். ஆனால் என் தவறை 3 நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன். அதனால்தான் குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக நிறுத்தப்பட்ட என் கட்சி வேட்பாளர்களை உடனே விலக்கிக் கொண்டேன்.
மோடியின் வளர்ச்சி அபாரமானது. ஒட்டுமொத்த நாட்டுக்கே அவர் நம்பிக்கை தருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இவ்வாறு உமாபாரதி கூறினார்.