மோடி ‘அழிவின் நாயகன்’ பேச்சு… அட்வான்சாகவே மன்னிப்பு கடிதம் தந்துவிட்ட உமாபாராதி
டெல்லி: நரேந்திரமோடியை ‘அழிவின் நாயகன்' என்று வர்ணித்த உமாபாரதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நரேந்திர மோடியைப் பற்றி தான் பேசியதும்... விமர்சனம் செய்ததும் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்பார்த்தே உமாபாரதி கட்சித்தலைமைக்கு மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக உமா பாரதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
பின்னர் தனது கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் கடந்த 2011ல் பாஜகவில் இணைந்த உமா பாரதி, தற்போது அக்கட்சியின் சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நரேந்திரமோடி பற்றி உமா பாரதி முன்பு பேசிய சர்ச்சைக்குரிய உரை அடங்கிய விடியோ சிடியை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அழிவின் நாயகன்
அந்த சிடியில்,"எனக்கு அவரை (நரேந்திர மோடியை) கடந்த 1973ம் ஆண்டிலிருந்து தெரியும். அவர் வளர்ச்சி நாயகன் அல்ல; அழிவு நாயகன்.
எல்லாம் கட்டுக்கதை
அவரது ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் உற்பத்தி அதிகரித்ததாகவும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த ஏழை மக்களை வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்த்தியதாகக் கூறுவதெல்லாம் கட்டுக்கதை.
மக்களுக்கு அச்சுறுத்தல்
குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அச்சத்தில் ஹிந்துக்கள் உள்ளனர். அந்த மாநிலம் முழுவதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது' என உமா பாரதி பேசியிருப்பது இடம்பெற்றுள்ளது. அதில், நரேந்திர மோடியைப் பற்றி மேலும் பல குற்றச்சாட்டுகளை உமா பாரதி கூறியுள்ளார்.
உமா பாரதி மன்னிப்பு
ஆனால் இதுபோன்ற சர்ச்சை வரும் என்று முன்கூட்டியே அறிந்த உமாபாரதி மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள மூன்றாண்டுக்கு முந்தைய வி.சி.டி. குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகாரும் கொடுத்துள்ளார்.
உண்மை இருக்கலாம்
அதே சமயம் விசிடியை வெளியிட்ட அபிஷேக் சிங்வி கூறுகையில், "இந்த உரை பதிவு செய்யப்பட்டபோது பாஜகவில் உமா பாரதி இல்லை. இருப்பினும் தேர்தல் அல்லாத சமயத்தில் இதுபோன்று ஒரு மூத்த தலைவர் கூறும் குற்றச்சாட்டுகளில் கொஞ்சமாவது உண்மை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவை பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் பற்றியது என்பதை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அது பழைய சிடி பாஸ்
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி, "இதுபோன்ற பழைய சிடியை காங்கிரஸ் வெளியிட்டிருப்பது அதன் நம்பிக்கை இழந்த போக்கையும், சிந்தனை வறட்சியையும் காட்டுகிறது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "இதுபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களின் உரைகள் அடங்கிய சிடிகளை பாஜகவும் வெளியிட முடியும்' என்று கூறியுள்ளார்.
இதெல்லாம் சகஜமப்பா
அரசியலில் இதுபோன்று தூற்றிவிட்டு போற்றுவது எல்லாம் சகஜமப்பா என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.