மீனவர்கள் படுகொலை வழக்கு: இந்தியா, இத்தாலி விசாரிக்க ஐ.நா. சர்வதேச தீர்ப்பயாம் தடை!!
டெல்லி: தமிழகம் மற்றும் கேரளா மீனவர்களை இத்தாலி கடற்படையினர் படுகொலை செய்த வழக்கை இந்தியாவும் இத்தாலியும் விசாரிக்க ஐ.நா.வின் கடல்சார் சட்டங்களுக்கான சர்வதேச தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2012ஆம் ஆண்டு கொச்சி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் மாலுமிகள் மிஸிமிலினோ ரதோர், சல்வதார் ஜிரோம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே தங்களது நாட்டு மாலுமிகளைக் காப்பாற்றுவதற்காக ஜெர்மனியின் ஹம்பரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்டங்கள் தொடர்பான சர்வதேச தீர்ப்பாயத்தில் இத்தாலி முறையீடு செய்தது. இந்த வழக்கை இந்தியா விசாரிக்க அதிகாரமில்லை என்று தமது மனுவில் இத்தாலி தெரிவித்தது.
இந்த முறையீட்டு மனு மீது அண்மையில் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்தியா சார்பில், 2 அப்பாவி மீனவர்களை முன்னெச்சரிக்கை செய்யாமலேயே, இத்தாலியக் கடற்படை வீரர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கானது, சட்டப்படி இந்தியாவில்தான் நடைபெற வேண்டும்.
ஐ.நா.வின் கடல் சார் சட்டத்தின் 97-ஆவது பிரிவின் கீழ் இவ்வழக்கை கொண்டு வர முடியாது. குற்றம்சாட்டப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்களின் ஒருவரான சல்வதார் பிணையக் கைதியைப் போல இந்தியாவில் தங்க வைக்கப்பட்டார் என்ற இத்தாலி வாதத்தையும் ஏற்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டோருக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் சலுகையை, அவர்களால் பாதிக்கப்பட்டோரின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தே முடிவு செய்ய முடியும்.
இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிக அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுவிட்டன. எனவே, அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற இத்தாலியின் வாதத்தை ஏற்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. இந்த நிலையில் இன்று ஐ.நா. சர்வதேச தீர்ப்பாயமானது, இருநாடுகளும் வழக்கை விசாரிக்க தடை விதித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 24-ந் தேதிக்குள் இருநாடுகளும் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் இத்தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications