உ.பி.: காதலை ஏற்க மறுத்த சிறுமியின் மீது ஆசிட் ஊற்றிய தாய்மாமன்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 11ம் வகுப்பு மாணவியை அவரது தாய் மாமா கடத்தி ஆசிட் ஊற்றிய கொடுமை நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சரோஜினிநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அவரது 35 வயது தாய் மாமா மாணவியை தன்னை வந்து பாராபிர்வா சவுக்கில் சந்திக்குமாறு நேற்று தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுக்கவே அவர் தன்னை உடனே வந்து பார்க்கவில்லை என்றால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மாமாவின் மிரட்டலுக்கு பயந்த சிறுமி அவர் கூறிய இடத்திற்கு சென்றார். அங்கு தனது மாமா இருந்த டாடா இன்டிகா காரில் ஏறி உட்கார்ந்துள்ளார். உடனே அந்த நபர் காரை ஷாஹீத் பாத் பக்கம் ஓட்டிக் கொண்டே மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். மேலும் தனது காதலையும் மாணவியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
மாமாவின் சில்மிஷத்தை பொறுக்க முடியாத மாணவி அவரது காதலை ஏற்க மறுத்தார். இதையடுத்து அந்த நபர் தனது சகோதரியின் மகள் என்றும் பாராமல் மாணவி மீது ஆசிட் ஊற்றினார். வலியில் துடித்த மாணவி கார் கதவை திறந்து கீழே குதித்தார். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ டிரைவரின் உதவியோடு அவர் ரமாபாய் காவல் நிலையத்தை அடைந்தார். அங்கிருந்த போலீசார் மாணவியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். அந்த நபர் கடந்த சில நாட்களாகவே தொந்தரவு கொடுத்து வந்ததாக மாணவியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications