"மூன்றடுக்கு பாதுகாப்புடன்" பொது இடத்தில் மூச்சா போன மத்திய அமைச்சர்.. என்ன கொடுமை சார்!
மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது.
டெல்லி: மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் சுவற்றில் அவர் சிறு நீர் கழிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஸ்வச்ச பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடங்கியது. இத்திட்டம் அனைத்து மக்களும் தங்கள் வசிக்கும் இடங்களை தானே சுத்தம் செய்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதே.
பொது இடங்களை மக்கள் கழிப்பறையாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக கிராம மற்றும் நகர்ப்புறங்களில் பொதுக் கழிப்பிடங்களும் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது.
|
ஸ்வச்ச பாரத் விளம்பரங்கள்
பொது இடங்களில் மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்கக்கூடாது என தொலைக்காட்சிகளில் நொடிக்கு நொடி விளம்பரங்களை ஒளிப்பரப்பியும் மத்திய அரசு தனது ஸ்வச்ச பாரத் திட்டத்தை பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவற்றில் சிறுநீர் கழித்த அமைச்சர்
மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் அண்மையில் பீகார் மாநிலத்தின் மோதிஹரிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் சாலையோரம் இருந்த சுவற்றில் அவர் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.
போலீஸ் பாதுகாப்புடன்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்திலும் அமைச்சர் தனது காருக்கு அருகே சாலையோரம் உள்ள சுவற்றில் சிறுநீர் கழிக்கிறார். அப்போது அவரை சுற்றியும் அவரது பாதுகாப்பு வீரர்கள் திரும்பிக்கொண்டு பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.
|
அமைச்சரால் சர்ச்சை
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. அமைச்சரின் இந்த செயலால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தை அமைச்சரே பின்பற்றவில்லை என மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.