அரசியல் நெருக்கடி ஆயிரம் இருந்தும் #ஜல்லிக்கட்டு சந்தேகமே
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அரசியல் ரீதியான நெருக்கடிகள் அதிகரித்து வந்தாலும், சட்ட நெருக்கடி காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரக்கூடாது என்று மத்திய அரசுக்கு அட்டார்னி ஜெனரல் கொடுத்துள்ள பரிந்துரை ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பெரும் தடைக்கல்லாக உள்ளது.
மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு, கொண்டுவந்த சட்ட திருத்தத்தின் காரணமாக, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தபோதிலும், நீதிமன்றம் கூறிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மாநில அரசு தவறிவிட்டதால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவ்வாண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கிறது. இதில் இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது, மற்றொன்று, அவசர சட்டம் மூலம், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பது.
இவ்விரண்டில், சட்ட திருத்தம் கொண்டுவருவது இயலாத காரியம். ஏனெனில் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவில்லை. அவசர சட்டம் கொண்டுவருவது மட்டுமே ஆப்ஷன். அவ்வாறு அவசர சட்டம் கொண்டுவந்தால், எப்படியும் உச்சநீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அப்போது, அவசர சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதோடு, மத்திய அரசு கண்டனத்தை சம்பாதிக்கும் என்றும் அட்டார்னி ஜெனரல் அறிவுரை வழங்கியுள்ளாராம்.
சட்ட சிக்கலில் மத்திய அரசு தவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்திருக்க முயன்றிருந்தாலும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்கிறது பாஜக வட்டாரம்.
இது தமிழகத்திற்கு தேர்தல் ஆண்டு. எனவே, அனைத்து கட்சிகளுமே, ஜல்லிக்கட்டை நடத்தி பெயர் வாங்கவே விரும்புகின்றன. சட்டம் அதற்கு பெரும் தடையாக இருப்பதால் ஜல்லிக்கட்டு இவ்வாண்டு நடப்பது சந்தேகமே.












Click it and Unblock the Notifications