இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் ஸ்ரீவத்சவா பதவி நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்சவாவை அதிரடியாக பதவி நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ் 125 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 18 சர்வதேச விமான நிலையம், 78 உள்நாட்டு விமான நிலையம் உள்ளிட்ட 26 சிவில் போக்குவரத்து விமான நிலையங்களை உள்ளன.

இந்நிலையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்த ஸ்ரீவத்சவா திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், விரைவில் அந்த பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்தார். இருப்பினும் ஸ்ரீவத்சவா நீக்கத்திற்கான காரணத்தை அவர் கூறவில்லை.
இதையடுத்து புதிய தலைவராக விமான நிலையங்கள் ஆணைய இணைச் செயலாளர் அருண்குமார் நியமிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஸ்ரீவத்சவா கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 15 மாதங்களே ஆகின்றது.
5 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் அதற்கு முன்பாக அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரது பதவி நீக்கத்திற்கு காரணம் என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications