தமிழகத்துக்கு வர்தா புயல் நிவாரணமாக ரூ.266.17 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: தமிழகத்திற்கு வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ.266.17 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் உருவான 'வர்தா' புயல் சென்னை அருகே கரையைக் கடந்தபோது கடும் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 17 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 40 கோபுரங்கள், 800 மின்மாற்றிகள் மற்றும் 4500 மின் பகிர்மானப் பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், 15,000 கி.மீ. உயர்நிலை மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. இதில், புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு வார்தா புயல் நிவாரணமாக ரூ.266.17 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வறட்சி நிவாரணமாக ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வறட்சி மற்றும் வார்தா புயல் நிவாரணமாக மொத்தம் ரூ.2014.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications