பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் சோலி முடிஞ்சது! ஜேடியூவுக்கு கொள்ளி வைக்கிறது பாஜக அரசின் வக்பு மசோதா!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியை பிளவுபடுத்தி வருகிறது. மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய மசோதாவை ஜேடியூ ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறுவதால் பீகார் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை தாங்கி நிற்கக் கூடிய கட்சிகள் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம். இந்த இரு கட்சிகளுக்குமே முஸ்லிம் வாக்குகள்தான் பிரதான பலம். ஆனாலும் மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இந்த இரு கட்சிகளுமே ஆதரித்தனர்.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஜேடியூ ஆதரித்ததற்கு எதிராக அடுத்தடுத்து அக்கட்சியின் முஸ்லிம் தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் உடல்நிலையை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடி பிரசாரம் செய்து வரும் நிலையில், ஜேடியூவை விட்டு வெளியேறும் தலைவர்களும் நிதிஷ்குமாரின் உடல்நிலை, மனநிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலின் போது, நிதிஷ்குமாரின் ஜேடியூ சகாப்தத்தை முடிக்கும் வகையில் கூட்டணியில் இருந்த போதும் சிராக் பாஸ்வானின் கட்சியை கொம்பு சீவி விட்டு ஜேடியூ வேட்பாளர்களை தோற்கடிக்க வைத்தது பாஜக.
தற்போது பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது.. இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் ஜேடியூ கட்சியே இரண்டாக உடையும் நிலைமை உருவாகிவிட்டது. நிதிஷ்குமாருக்கு எதிராக இஸ்லாமிய தலைவர்கள் அடுத்தடுத்து ஜேடியூவை விட்டு வெளியேறுவதால் அக்கட்சிக்கு மிக கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
என்னதான் வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றிவிட்டதாக பாஜக பெருமிதம் கொண்டாலும் பீகாரில் ஜேடியூ எதிர்கொண்டு வரும் பிளவுகள் அக்கட்சியை மிகவும் பீதியடைய வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் இருந்து வருகின்றனர். தற்போதைய வக்பு வாரிய மசோதா நிறைவேற்றம் ஜேடியூ பிளவு இவை அனைத்துமே ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டனிக்கே மிகப் பெரும் சாதகமாக உருமாறி நிற்கின்றன. இதனால்தான், பீகார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்டத்தை அமல்படுத்தவே மாட்டோம் என இப்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ். இதனால் ஜேடியூவின் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications