பாட்னாவில் எதிர்க்கட்சிகள் போட்டோ செசன் நடக்குது.. 300 இடங்களுக்கு மேல நாங்கதான் ஜெயிப்போம்-அமித்ஷா!
ஜம்மு: பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர் போட்டோ செசன் நடைபெறுகிறது; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் 300 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும்; மோடி மீண்டும் பிரதமராவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாட்னாவில் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிரது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். லோக்சபா தேர்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை கடுமையாக விமர்சித்தார். ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இன்றைக்கு மேற்கு வங்கம் இந்தியாவுடன் இணைந்திருப்பதற்கு காரணம் சியாமா பிரசாத் முகர்ஜிதான். ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரம் வழங்கக் கூடாது என எதிர்த்தவரும் அவர்தான். ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய காஷ்மீர் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
இன்றைக்கு பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று திரண்டு போட்டோ செசன் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாட்னாவில் ஒன்று கூடி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவாலாக உருவெடுக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது எல்லாம் ஒன்றுதான்.. 2024-ம் ஆண்டு பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராவார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications