தமிழக அரசின் வரைவு அவசர சட்டத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியது உள்துறை அமைச்சகம்!
மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தத்துக்கான தமிழக அரசின் அவசர சட்டத்தை தற்போது ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்துக்கான தமிழக அரசின் வரைவு அவசர சட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு எனும் தமிழர் பண்பாட்டு அடையாள உரிமை மீட்புக்காக தமிழகம் புரட்சியில் இறங்கியுள்ளது. இதையடுத்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்துக்கான அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்தது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று அதிமுக எம்பிக்கள் அனைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து நேரில் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் வரைவு அவசர சட்டம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தில் இருந்து இன்று மாலைதான் திரும்புகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு அந்த அவசர சட்டம் அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பிப்பார். இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications