4 கட்ட தேர்தலில் 270 இடங்களில் பாஜக வெற்றி- மெஜாரிட்டி கிடைச்சுடுச்சு..இப்பவே ரிசல்ட் சொன்ன அமித்ஷா!
கொல்கத்தா: 18-வது லோக்சபா தேர்தலில் தற்போதே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது; பிரதமர் மோடி 5 ஆண்டுகாலம் மீண்டும் பிரதமராக தொடருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: லோக்சபா தேர்தலில் தற்போது வரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து உள்ளன. மொத்தம் 380 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 380 தொகுதிகளில் பாஜக 270 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட்டது. பிரதமர் மோடிக்கு லோக்சபா முழு பெரும்பான்மை இப்போதே கிடைத்துவிட்டது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை மமதா பானர்ஜியால் ஒரு போதும் தடுக்கவே முடியாது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என மமதா பானர்ஜியால் சொல்லவே முடியாது.
எங்களுடைய சகோதர, சகோதரிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது. இது மோடியின் உத்தரவாதம். குடியுரிமை வழங்குவது என்பது மத்திய அரசுக்கான அதிகாரம். எந்த ஒரு மாநில அரசாலும் அதை தடுத்துவிட முடியாது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மமதா பானர்ஜி பொய்களைப் பரப்பி வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் குடியுரிமை பெறுபவர்களுக்கு இந்த நாட்டில் ஒரு போதும் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்பது எங்களது வாக்குறுதி. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது வரை மொத்தம் 4 தேர்தல் முடிவடைந்துள்ளது. 4-வது கட்ட தேர்தல் மே 13-ந் தேதி 96 தொகுதிகளில் நடைபெற்றது. இதுவரை 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மொத்தம் 379 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 3 கட்ட தேர்தல்களும் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெறும். ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications