விஸ்ரூபமெடுத்த குட்கா விவகாரம்.. டெல்லியில் மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை! விஜயபாஸ்கருக்கு நெருக்கடி!
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லி: தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்தது தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை அனுமதிக்க அதன் விற்பனையாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் மத்திய அரசு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா குட்கா விவகாரம் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த புகார் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வருமானவரித்துறையால் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, வருமான வரித்துறை விசாரணை என அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் குட்கா விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்திருப்பது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.