தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் கே.எஸ். ராவ் ராஜினாமா: பாஜகவில் இணைகிறார்!
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கே. சாம்பசிவ ராவ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். அவர் விரைவில் பாஜகவில் இணையக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சரான கே.சாம்பசிவ ராவ், ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர். நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்ட போது காங்கிரஸில் இருந்து வெளியேறி தெலுங்குதேசத்தில் இணைய முடிவு செய்திருந்தார்.

ஆனால் மேற்கு கோதாவரி மாவட்ட தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள், சாம்பசிவ ராவை கட்சியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது அமைதி காத்து வந்தார். இப்போது திடீரென அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதே நேரத்தில் காங்கிரஸை விட்டு வெளியேறுவதாக அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியில் இணையவே சாம்பசிவ ராவ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கு கோதாவரியின் எழுரு லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார் ராவ். அவர் 1984ஆம் ஆண்டு முதன் முதலாக லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1989, 1998, 2004, 2009 ஆண்டுகளில் எம்.பி.யாக வென்றவர்.
மத்திய அமைச்சராக இருந்த புரந்தரேஸ்வரி கடந்த மாதம் ராஜினாமா செய்த கையோடு காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications