மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் கொலை வழக்கு.. முக்கிய நபரை சுட்டுப் பிடித்த போலிஸ்
சாஹால்பூர்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளரும் வலது கரம் என்று கூறப்பட்டவருமான சுரேந்திர சிங் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட முக்கிய நபர் ஒருவரை உத்தரப்பிரதேச மாநில போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் சொத்து என்று கூறும் அளவுக்கு அவர்கள் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார்.

இது இந்தியாவை தாண்டியும் பேசு பொருளானது. இந்திராகாந்தி, சோனியாகாந்தி ஆகியோருக்கு பெருவெற்றியை கொடுத்திருந்த இந்த தொகுதியில் ராகுலும் தொடச்சியாக மூன்று முறை வென்றிருந்தார். 1977 ம் ஆண்டுக்கு பிறகு இந்த தொகுதி நடப்பு தேர்தலில் தான் காங்கிரசை விட்டு கை நழுவியுள்ளது.
இப்படி ஒரு அபார வெற்றியை ஸ்மிருதி இரானி பெற்றதால் சிங்கத்தை அதன் குகையில் வீழ்த்தியவர் என்று கொண்டாடப்பட்டார். இந்த வெற்றிக்கு பின்னால் சுரேந்திர சிங் என்ற நபர் இருந்ததாக கூறப்படுகிறது. அமேதி தொகுதியில் ஸ்மிரிதியின் வலது கரமாக சுரேந்திர சிங் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பராலியா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் சுரேந்திர சிங் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் பாஜகவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்து அந்த கிராமத்திற்கு வந்த ஸ்மிருதி இரானி தனது உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று சூளுரைத்தார் மேலும் தனது உதவியாளரின் உடலை இடுகாடு வரை சுமந்து சென்றது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது
மேலும் ஸ்மிருதியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு காரணமாக இருந்த ஒருவர் கொல்லப்பட்டது பலத்த சர்ச்சையை கிளப்பியது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் ராமச்சந்திரா, தர்மநாத், நசீம், கோலு என்ற நான்கு பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய நபரான வாசிம் என்பவர் சாஹால்பூர் என்ற இடத்தில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று என்கவுண்டர் நடத்தி வாசிமை கைது செய்தனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாசிமுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications