காஷ்மீரில் யார் பலியானாலும் அது தேசத்துக்கு இழப்பு!- நரேந்திர மோடி
டெல்லி: காஷ்மீரில் யார் பலியானாலும் அது தேசத்துக்கு இழப்புதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைகள் பற்றியும், அங்கு அமைதி திரும்பவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர 'மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பேசினார்.
அவர் பேசியது:
காஷ்மீரில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் நான் நடத்திய கலந்துரையாடல்களில் இருந்து ஒரு விஷயம் தெரிய வந்தது. அவற்றை எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால் ஒற்றுமை மற்றும் அன்பு என்று குறிப்பிடலாம். இவையே காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான தாரக மந்திரங்கள்.

காஷ்மீரில் வன்முறை ஓயவேண்டும், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் பேசியுள்ளன. இதன் மூலம் உலகத்துக்கும், பிரிவினைவாத சக்திகளுக்கும் தங்களது உணர்வுகளை ஒற்றுமையுடன் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஒற்றுமையை நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதற்கு சமமாகக் கருதலாம். ஒற்றுமையாகச் செயல்பட்டால் மிகப் பெரிய பிரச்னைக்குக்கூட எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.
இந்த நாடு மிகப்பெரியது. பல்வேறு தரப்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். நாடு பிளவுபடாமல் ஒன்றுபட்டு இருக்க வேண்டுமானால் ஒற்றுமையாக இருக்க வேண்டியது நமது பொறுப்பாகும். தனிப்பட்ட குடிமகன் என்ற முறையிலும், சமூகம், அரசு என்ற முறையிலும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். நமது நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. சாதனை புரிய வேண்டுமானால் 125 கோடி மக்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். நமது தேசம் ஒன்றுபட்டு இருக்கும், நமது மக்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications