உ.பி.யில் தங்கப் புதையலைத் தேடி ஆங்காங்கே தோண்டிக் கொண்டிருக்கும் மக்கள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் 1,000 டன் தங்கப் புதையில் இருப்பதாக தெரிவித்த சாமியார் ஷோபன் சர்கார் தற்போது ஆதம்பூரில் 2,500 டன் தங்கப் புதையல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள தௌந்தியா கெரா கோட்டையின் கீழ் 1,000 டன் தங்கப் புதையல் இருப்பது போன்று தான் கனவு கண்டதாக சாமியாரான ஷோபன் சர்கார் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த கோட்டையில் தங்கப் புதையலை தோண்டி எடுக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்து வருகிறது.

ஆதம்பூரிலும் தங்கம்
உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூரில் 2,500 டன் தங்கப் புதையில் இருப்பதாக ஷோபன் தெரிவித்துள்ளார்.

பதேஹ்பூர்
ஷோபனின் ஆருடத்தை அடுத்து சிலர் பதேஹ்பூரின் கங்கா காட் அருகே உள்ள பழமையான சிவன் கோவில் பகுதியில் தங்கப் புதையலை எடுக்க மண்ணை தோண்ட ஆரம்பித்துவிட்டனர். சுமார் 12 இடங்களில் தோண்டப்பட்டதாகவும், சில இடங்களில் மக்கள் தங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சீடர் கோரிக்கை
ஷோபனின் சீடர் ஓம் ஜி கூறுகையில், ஆதம்பூர் கிராமத்தில் 2,500 டன் தங்க புதையல் உள்ளது. ஆதம்பூரில் உள்ள புதையலை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பஹ்ரைச்
இதற்கிடையே பஹ்ரைச்சில் உள்ள சர்கா கோட்டையில் தங்கப் புதையலைத் தேடி சிலர் மணலைத் தோண்டி மலை போன்று குவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு உள்ளூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் பிரதாப் சிங் முறையாக அனுமதி பெற்று 11.5 ஏக்கர் நிலத்தில் தோண்டியபோது தங்க காசுகள், நகைகள் மற்றும் அரிய வகை ஆயுதங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பைலனி காடு
பைலனி காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருகேயும் மக்கள் தங்கத்தை தேடி தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications