திருமணமாகாத பெண்கூட தனது குழந்தைக்கு கார்டியனாக முடியும்: உச்சநீதிமன்றம் தடாலடி
டெல்லி: திருமணம் ஆகாத பெண் தனது குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியை சேர்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவர் காதலருடன் திருமணத்துக்கு முன்பே 2 மாதங்கள் சேர்ந்து வசித்துள்ளார். அதனால் பெண் கர்ப்பமான பிறகு, காதலன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாத பெண்ணாக இருந்தாலும்கூட, குழந்தை உருவாக எந்த ஆண் காரணமோ அவரின், அனுமதியுடன்தான் தாய் கார்டியனாக இருக்க முடியும் என்ற விதிமுறையை எதிர்த்து அப்பெண் டெல்லி விசாரணை நீதிமன்றதில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு தள்ளுபடியான நிலையில், அப்பீலின்போது ஹைகோர்ட்டிலும் மனு தள்ளுபடியே செய்யப்பட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்திலும் அப்பீலுக்கு சென்றுள்ளார் அப்பெண். தனது மனுவில், "குழந்தையின் தந்தையின் பெயரை வெளியிட விரும்பவில்லை, 2 மாதங்களே சேர்ந்திருந்த தந்தைக்கு குழந்தை வளர்ப்பில் எவ்வித பங்கும் இல்லை" என கூறியிருந்தார்.
நீதிபதி விக்ரமஜித் சென் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விக்ரமஜித், "கீழ் நீதிமன்றங்கள், குழந்தையின் நன்மையை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக தீர்ப்பளித்துள்ளன. திருமணம் செய்யாவிட்டாலும், குழந்தையை அதன் தாய் கார்டியனாக இருந்து வளர்க்கலாம்" எனக் கூறியுள்ளார்.
தற்போதுள்ள சட்டப்படி, குழந்தையின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி அவர் அனுமதியை பெற்ற பிறகே பெண் தனது குழந்தைக்கு கார்டியனாக முடியும். ஏனெனில், குழந்தையின் இயல்பான கார்டியன் தந்தையே ஆகும்.












Click it and Unblock the Notifications