பசுக்களை பாதுகாக்க விரிவான கணக்கெடுப்பு! அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க ஒரு விரிவான பசு கணக்கெடுப்பை நடத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் பசுக்களை பாதுக்காக்க விரிவான பசு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்க சுமார் 6,000க்கும் அதிகமான பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கிட்டத்தட்ட 12 லட்சம் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பசுக்களின் எண்ணிக்கை அறிந்துக்கொள்ளும் விதமாக விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. அதாவது கால்நடை வளர்ப்பாளர்களிடம் இருப்பவை, பசு பராமரிப்பு மையங்களில் பராமரிக்கப்படுபவை, தெருவில் திரியும் ஆதரவற்ற பசுக்கள் என அனைத்தையும் மாநில அரசு கணக்கெடுக்க இருக்கிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பசுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அவற்றை பராமரிக்க தகுந்த இடவசதி இருப்பது உறுதி செய்யப்படும். இந்த பராமரிப்பு இடத்திற்காக ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அதேபோல சாமானிய மக்களுக்கு எந்த வித தொந்தரவும் ஏற்படுத்தாத வகையில் தெருவில் திரியும் பசுக்கள் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்படும். ஏற்கெனவே ஆதரவற்ற பசுக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நல்ல பலனை கொடுத்திருக்கிறது.
இதற்காக செயல்படுத்தப்பட்ட முதலமைச்சரின் சஹ்பகீதா யோஜனா திட்டத்தின் கீழ் 1.85 லட்சம் பசுக்கள், அதற்கென உள்ள பராமரிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நலிந்த பசுக்களை பராமரிக்கும் குடும்பத்திற்கு அரசு உதவி தொகையும் வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் ஒரு பசுவுக்கு ரூ.30 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது ரூ.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பசுக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications