அமேதி: 'வளைத்த' நிலத்தை அரசிடம் ஒப்படைக்க ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு கோர்ட் உத்தரவு!
லக்னோ: அமேதியில் சர்ச்சைக்குரிய அரசுக்கு சொந்தமான நிலத்தை உடனே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஒப்படைக்க வேண்டும் என்று அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 1980களில் சாம்ராட் சைக்கிள் நிறுவனத்துக்கு 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கடந்த வாரம் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிளப்பியிருந்தார்.
இதனிடையே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான இந் நிலத்தை உத்தரப்பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்குமாறு வருவாய் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அமேதியில் உள்ள கௌரிகஞ்ச் வருவாய் நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாசங்கர் பாண்டே கூறியதாவது:
உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய நிலமானது சாம்ராட் சைக்கிள் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
ஆனால் போலியான ஆவணங்களைத் தயாரித்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனை அமேதி மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் தொழில் வளர்ச்சிக் கழக மண்டல மேலாளரே தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான இந்த நிலத்தை உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு உமாசங்கர் பாண்டே கூறினார்.












Click it and Unblock the Notifications