உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தியா? மவுனம் காக்கும் காங்.
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி முன்னிறுத்துவதப்படுவாரா என்ற யூகங்களுக்கு பதிலளிக்காமல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வியூகங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாக களமிறங்கியுள்ளன. பாஜகவின் தேசிய செயற்குழு உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியோ அதிரடியாக உத்தரப்பிரதேச மேலிடப் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத்தை களமிறக்கியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திய பின்னரே யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்போம். ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவர் தேசிய தலைவர். அவரை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த மாட்டோம்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னர் முசாபர்நகர் கலவரத்தை பாஜக நிகழ்த்தியது. அதே போல் தற்போதும் உத்தரப்பிரதேசத்தின் ஆங்காங்கே மத வன்முறை தூண்டிவிட்டு இந்துக்கள் வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. இதற்கு மத்திய அரசும் உதவி செய்து வருகிறது.
இத்தகைய போக்குகளைக் கைவிட்டு தங்களது கொள்கைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்வதுதான் சரியானதாக இருக்கும்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications