ஆர்.எஸ்.எஸ் தலைவரைக் கூப்பிட்டு விருந்து வைத்த உ.பி. ஆளுநர் ராம் நாயக்!
லக்னோ: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்துக்கு உ.பி. மாநில ஆளுநர் ராம் நாயக் இரவு விருந்து கொடுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு இந்த விருந்து நடந்தது. ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த விருந்தின்போது ஆளுநருடன் தனி அறையில் நீண்ட நேரம் மோகன் பகவத் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கான காரணம், சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்துத் தெரியவில்லை. ஆனால் உ.பி. குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், இரு தலைவர்களும் நீண்ட காலமாக நெருங்கிப் பழகி வருபவர்கள். இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். ஆளுநர்தான் தனிப்பட்ட முறையில் மோகன் பகவத்தை விருந்துக்கு அழைத்திருந்தார் என்றார்.
உ.பி தலைநகர் லக்னோவில், அக்டோபர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கேந்திரிய கார்யகரி மண்டல் கூட்டத்தை நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இதற்காக பகவத் வந்துள்ளார். இந்த வருகையின்போதுதான் அவருக்கு ஆளுநர் விருந்து வைத்துள்ளார்.
ஏற்கனவே தூர்தர்ஷினில் மோகன் பகவத்தின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் உ.பி ஆளுநர் அவருக்கு விருந்து கொடுத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.