யூ.பி.எஸ்.சி. தேர்வு: ஆங்கில மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது.. மத்திய அரசு புதிய அறிவிப்பு
டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆங்கில திறனறிதல் தொடர்பான மதிப்பெண்கள், மாணவர்கள் அடுத்த கட்டத்தேர்வில் பங்கேற்பதற்கான தரப்படுத்துதல் மற்றும் தகுதி மதிப்பீட்டிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2011-ம் ஆண்டு இத்தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, அடுத்த ஆண்டு நடைபெறும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யு.பி.எஸ்.சி தேர்வு
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில், ஆங்கில திறனறித் தேர்வு கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பிராந்திய மொழிகள்
இது ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு சாதகமான நடவடிக்கை என்றும், இந்தி அல்லது பிராந்திய மொழிகளை கல்வி கற்பதற்கான பயிற்றுமொழியாக கொண்ட மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் புகார் எழுந்தது.
ரத்து செய்ய கோரிக்கை
ஆங்கில திறனறித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அமைச்சர் அறிவிப்பு
இந்த விவகாரம் தொடர்பான முக்கிய அறிவிப்பை, மத்திய பணியாளர் பயிற்சித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
தகுதி மதிப்பெண்கள்
"சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டாம் தாளில் இடம்பெற்றுள்ள ஆங்கில மொழி திறனறிதல் தொடர்பான மதிப் பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அடுத்த கட்டத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பீட்டுக்கு அந்த மதிப்பெண்கள் தேவையில்லை.
பங்கேற்க வாய்ப்பு
2011-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, 2015-ம் ஆண்டு நடைபெறும் தேர்வில் பங்கேற்க கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்" என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
திட்டமிட்டபடி தேர்வு
அதே சமயம், வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கணக்கில் வராது
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாளில் ஆங்கிலம் திறனறிதல் தொடர்பாக 9 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு 22 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் இனிமேல் தரப்படுத்தல் மற்றும் தகுதி மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப் படமாட்டாது.
மாணவர்கள் அதிருப்தி
மத்திய அரசின் முடிவை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆங்கில திறனறிதல் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அது வரை போராட்டம் தொடரும் என்று அவர் கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications